Tuesday, 7 May 2013

மீனம் - 2013 குரு பெயர்ச்சிப் பலன்கள்



நிகழும் மங்களகரமான விஜய வருஷம் உத்தராயனம் வருஷரிது வைகாசி மாதம் 14ம் தேதி (28-05-2013)

செவ்வாய்கிழமையும், கிருஷ்ண பஞ்சமியும், உத்திராடம் நக்ஷத்ரமும் சுப்ரம் நாம யோகமும் கௌலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று உதயாதி மாலை 9.15க்கு தனுசு லக்னத்தில் ஸ்ரீகுரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.

குரு பெயர்ச்சியின் காரணமாக பன்னிரு ராசிகளுக்கும் ஏற்படக் கூடிய பொதுப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, கிரகநிலைகளின் துணைக்கொண்டு ஆராய்ந்து சொல்கின்றார், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்;  பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast).

 அவரது கணிப்பில் பன்னிரு ராசிகளுக்ககுமான விரிவான பலன்கள் இங்கு தொடர்ந்து பதிவாகும். இங்கு குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்களே என்பதை வாசகர்கள் கவனத்திற் கொள்க. ஒவ்வொரு ஜாதகருக்குமான தசாபுத்தி நிலைகளின் அடிப்படையில், அவர்களது  நிகழ் பலன்களில் மாற்றங் காணலாம்.

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல் வழி ஜோதிடருன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். ஜோதிடரின் மின்னஞ்சல் முகவரி: ramjothidar@gmail.com
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

பிறர் செய்ய முடியாத செயலை எடுத்து வியூகங்கள் வகுத்து முடித்துக் காட்டும் மீன ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் சுபங்களை தனது பார்வையின் மூலமாக வழங்குபவர் என்றழைக்கப்படும் தனகாரகன் குருவை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். தாமரை இலை தண்ணீர் போல பல விஷயங்களில் ஒதுங்கி இருப்பீர்கள். வெற்றி பெற இறுதி வரை போராடுவீர்கள்.

இதுவரை உங்கள் ராசி மற்றும் தொழில்ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார்.

உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய  ஆயுள்ஸ்தானம், தொழில்ஸ்தானம், விரையஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், ஆயுள்ஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.

உங்கள் ராசிக்கு நான்காம் இடமான மிதுனத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் நான்காம் இட அமர்வு (அர்த்தாஷ்டம குரு) வாழ்வில் சில சிரமங்களுக்கு மத்தியில் சுப பலன்களை அனுபவிக்க வைக்கும். இருப்பினும் குருபகவானின் பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில நல்ல பலன்களையும் பெறலாம். மனதில் சஞ்சலம் தோன்றும். குடும்பப் பொறுப்புக்களை தைரியத்துடன் எதிர்கொள்வது நன்மை தரும்.

எவரிடமும் அளவுடன் பேசுங்கள். தம்பி, தங்கைகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தாமதம் ஆகுமென்பதால், அவர்களின் அதிருப்தியை சம்பாதிப்பீர்கள். சிலருக்கு உடன்பிறந்தவர்களாலும் உறவினர்களாலும் தொல்லை வந்துவிலகும். பணவரவு சுமாராகவே இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். பயணங்களில் நிதான வேகத்துடன் செயல்படுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம். தாயின் தேவையை நிறைவேற்ற நினைத்தாலும் பணிச்சுமையால் அது தாமதமாகும். புத்திரர்கள் சுயதேவைகளை நிறைவேற்ற பிடிவாத குணத்துடன் நடந்துகொள்வர். உடல்நல பாதிப்பு ஏற்படும் போது அலட்சியம் செய்யாமல், உடனடி சிகிச்சை எடுத்து விடுங்கள்.

கணவன், மனைவி குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து ஒன்றுபட்ட மனதுடன் செயல்படுவர். வாழ்வின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறும். கஷ்டமான சூழ்நிலையிலும் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சுபசெலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு பணம் செலவாவதும் சிறு அளவில் கடன் பெறுவதுமான நிலைமை உண்டு. இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை, வேலை செய்யும் இடத்தில் குழப்பம், என ஒரு குழப்பமான சமயத்தில் குருப் பெயர்ச்சியை சந்திக்கின்றீர்கள். நல்லது. சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும் காலமிது.

உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள். படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலகட்டம் இது. தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும்.

பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது. முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். தொழிலதிபர்கள் அதிக மூலதனத்தேவைக்கு உட்படுவர். புதிய ஒப்பந்தங்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். பிற தொழில் செய்வோர் உற்பத்தியை உயர்த்த தரமான பணியாளர்களை பணியமர்த்துவதும், அதனால் அதிக செலவாவதுமான சூழ்நிலை இருக்கும்.

புதியதொழில்நுட்பங்களை பயன்படுத்ததேவையான இயந்திரம் வாங்குவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். புதிய தொழில் துவங்க விரும்புபவர்கள் அளவான மூலதனத்தில் திட்டங்களை நிறைவேற்றலாம்.
வியாபார அபிவிருத்தியும் எதிர்பார்த்த லாபவிகிதமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியை விரைந்து முடிக்க ஆர்வம் கொள்வர். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு தடையின்றி கிடைக்கும். பணிச்சிறப்பை பாராட்டி கூடுதல் பணவரவு, சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்களுக்கு கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிரிகளிடம் இருந்து விலகுவது நன்மை தரும். இயந்திரங்களை கையாளுபவர்கள் பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றவும். படித்து முடித்து வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு திருப்திகரமான பணி கிடைக்கும். பெற்றோரை மதித்து செயல்படுவது அவசியம்.

பரிகாரம் : வியாழகிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவக்கிரகங்களை 9 முறை வலம் வரவும்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts